Monday 23 January 2012

சிவாஜி கணேசன் பற்றி

பிறந்த ஊர்   
சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். இது மிகவும் செழிப்பானது. அவருடைய தந்தை சின்னையா மன்றாயரின் குடும்பம் அங்குதான் வசித்தது. தாயார் பெயர் ராஜாமணி அம்மாள். அவருடைய தகப்பனார் பெயர் சின்னச்சாமி காளிங்கராயர், அவர் ரெயில்வேயில் அதிகாரியாக பதவி வகித்தவர். திருச்சி, மதுரை பகுதியில் ரெயில்பாதை போடப்பட்டபோது, அதற்கு அவர் பொறுப்பாக இருந்தார்.
சின்னச்சாமி காளிங்கராயருக்கு 11-வதாக பிறந்த குழந்தை ராஜாமணி அம்மாள்! மகள் மீது காளிங்கராயருக்கு மிகுந்த பாசம். எனவே “ராஜாமணி எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்து கொடுத்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும்” என்று எண்ணினார்.
சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் அதிகம் படிக்காதவர். ஆயினும் ஒரு மிராசுதார். எனவே, அவருக்கு ராஜாமணியை திருமணம் செய்து கொடுத்து, வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக்கொண்டார். எனினும் சில காலத்துக்குப்பின் சின்னையா மன்றாயர் ரெயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். நாகப்பட்டினத்தில் இருந்த ரெயில்வே ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்தார். மனைவியுடன் அங்கு குடியேறினார்.
சிவாஜி பிறந்தார்
சின்னச்சாமி காளிங்கராயர் வீடு விழுப்புரத்தில் இருந்தது. பிரசவத்துக்காக அங்கு ராஜாமணி அம்மாள் சென்றார். அங்குதான் 1928 அக்டோபர் 1-ந் தேதி சிவாஜிகணேசன் பிறந்தார்.
சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், தீவரவாத எண்ணம் கொண்டவர்கள். “அகிம்சை மூலம் வெள்ளையர்களைப் பணிய வைக்க முடியாது.
துப்பாக்கி ஏந்தினால்தான், நாட்டைவிட்டு ஓடுவான்” என்ற நேதாஜியின் கொள்கையை கடைபிடிப்பவர்கள்.அப்போதெல்லாம், ஒரு காரியத்தை நடத்துவது யார் என்று திருவுளச்சீட்டு போட்டுப்பார்ப்பார்கள். “ஆஷ் துரையை சுட்டுக்கொல்வது யார்?” என்று தீவிரவாத இளைஞர்கள் சீட்டு போட்டு பார்த்தபோது, வாஞ்சிநாதன் பெயர் வந்தது. அதனால், அவர், மணியாச்சி ஜங்ஷனில் ஆஷ்துரையை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் ரெயிலுக்கு யார் வெடி வைப்பது என்று, சின்னையா
மன்றாயரும் அவர் நண்பர்களும் திருவுளச் சீட்டு போட்டுப்பார்த்தார்கள். அதில் சின்னையாவின் பெயர் வந்தது. அதனால் ரெயிலுக்கு அவர் வெடி வைத்தார். போலீசார் இதைப்பார்த்துவிட்டார்கள். அவரை துரத்திச் சென்றார்கள். சின்னையா தப்பி ஓடும்போது, அவரை நோக்கி போலீசார் சுட்டனர். சின்னையா கீழே விழுந்தார். போலீசார் அவரை சூழ்ந்து கொண்டு தடியால் தாக்கினர். சின்னையா தலையில் பலத்த காயம் அடைந்தார்.
அவரை கைது செய்து, வேலூருக்கு கொண்டுபோய், ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்றார். அவர் குணம் அடைந்த போதிலும், காது சரியாகக் கேட்கமுடியாமல் போய்விட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்!
7 ஆண்டு ஜெயில் ரெயிலுக்கு வெடி வைத்ததாக சின்னையா மன்றாயர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
“மருமகன் ஜெயிலுக்கு போய்விட்டாரே” என்று சிவாஜியின் தாத்தா மனம் நொந்தார். நாளுக்கு நாள், உடல் நலிந்தது. சிலகாலத்துக்குப்பின் அவர் மரணம் அடைந்தார்.
அண்ணன்கள்
சிவாஜிக்கு திருஞான சம்பந்த மூர்த்தி, கனக சபாநாதன், தங்கவேலன் என்று மூன்று அண்ணன்கள். சிவாஜிக்கு சூட்டப்பட்ட பெயர் கணேசமூர்த்தி .தம்பி சண்முகம், தங்கை பத்மாவதி.சிவாஜியின் தாத்தா இறந்துபோன பிறகு, ராஜாமணியம்மாள் குடும்பத்துடன் திருச்சியில் குடியேறினார். திருச்சி அருகே, பொன்மலைக்குப் பக்கத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் ராஜாமணி அம்மாள் குடும்பத்துக்கு ஒரு வீடு இருந்தது. அங்கு வசிக்கலானார். சிவாஜிகணேசன் வளர்ந்தது, நாடக நடிகரானது, சினிமா உலகில் புகுந்தது எல்லாமே இந்த வீட்டில் வசித்த போதுதான்.
“பால்காரம்மா”
எஸ்.எஸ்.வாசனின் தாயாரும், எம்.ஜி.ஆரின் தாயாரும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற எப்படி கஷ்டப்பட்டார்களோ, அதுபோல் ராஜாமணி அம்மாளும் மிகவும் கஷ்டப்பட்டார். `தந்தையோ இறந்து போய்விட்டார். கணவர் சிறை சென்று விட்டார். பிழைக்க என்ன செய்வது? குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது’ என்று யோசித்த ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தார். கறவை மாடு வாங்கி, பால் விற்கத் தொடங்கினார். நாளடைவில், ராஜாமணி அம்மாள் என்ற பெயர் மறைந்துபோய், “பால்காரம்மா” என்ற பெயர் நிலைத்து விட்டது!
வீட்டுக்கு அருகே கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அங்கு சிவாஜியை சேர்த்துவிட்டார், ராஜாமணி அம்மாள். அப்போது சிவாஜிக்கு 4 வயது.தந்தை விடுதலை. சிறையில் இருந்த சின்னையா மன்றாயர், நல்ல மெக்கானிக் என்பதால் சிறையில் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வது, தண்ணீர் டாங்க்கை பழுது பார்ப்பது போன்றவற்றை செய்து, சிறை அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கினார்.எனவே நன்னடத்தைக்காக, 7 வருட தண்டனை 4 ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையாகி வீடு திரும்பினார், சின்னையா மன்றாயர். அப்போது சிவாஜிக்கு 4 வயது. “இவர்தான் உன் அப்பா” என்று, தன் கணவரைக் காண்பித்தார், ராஜாமணி அம்மாள். கண்களில் கண்ணீர் வழிய, தந்தையைக் கட்டித் தழுவிக் கொண்டார், சிவாஜி. சுதந்திரப் போராட்டத்தில் சிவாஜியின் தந்தைக்கு 7 ஆண்டு ஜெயிலில்!- தந்தை கைதான நாளில் சிவாஜி பிறந்தார்பராசக்தி வெளிவந்த பின், “யார் இந்த சிவாஜி கணேசன்?” என்ற கேள்வி நான்கு திசைகளிலும் எதிரொலித்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள, ரசிகர்கள் ஆவல் கொண்டனர்.இதனால், அவர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டன. பத்திரிகைகள் அவரை பேட்டி கண்டு, படங்களுடன் பக்கம் பக்கமாக வெளியிட்டன.
7 வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார், சிவாஜி சிவாஜி கணேசன், 7-வது வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார்.பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே, சிவாஜிக்கு
நடிப்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் இருந்தது.
நடிப்புக்கு வித்திட்ட நிகழ்வு
ஒருமுறை, “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றார்.
அக்காலத்தில், சின்ன வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும் சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றி விடுவார்கள்.“கட்டபொம்மன்” நாடகத்தில், வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால், சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். வெள்ளைக்கார சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில், அந்த சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடந்து வந்தார்.
நாடகம் முடிந்து வீட்டுக்குச் சென்றதும், சிவாஜிக்கு அவர் அப்பாவிடம் உதை கிடைத்தது! ஏனென்றால் தேசியவாதியான சின்னையா மன்றாயருக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி, வெள்ளைக்கார சிப்பாய் வேடம் போட்டதால், அவருக்கு அளவு கடந்த கோபம்! “டேய், கூத்தாடிப் பயலே! உனக்கு என்ன தைரியம் இருந்தால், என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்!” என்று கூறியபடி அடித்தார்.இதனால் சிவாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. படுக்கையில் போய் விழுந்தார். “நாமும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்” என்ற எண்ணம், மனதில் ஆழமாகப் பதிந்தது.
யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை
இந்த நேரத்தில், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் “மதுரை ஸ்ரீபாலகான
சபா” என்ற நாடகக்கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது.
(யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த பெரும்பாலான
படங்களில் அவருடன் நடித்தவர். பிற்காலத்தில் சிவாஜி நடித்த “தூக்கு தூக்கி”யில், வாத்தியாராக நடித்தவர்.) இந்த நாடகக் குழுவில் சேர்ந்து விடவேண்டும் என்று சிவாஜி விரும்பினார். நாடகக் குழுவினர், திருச்சியில் நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.நாடகக் கம்பெனிக்கு சிவாஜி சென்றார். “எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா- அம்மா இல்லாத அனாதை. நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.அப்போது சிவாஜி நன்றாகப் பாடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருந்தார். அவரை ஒரு பாட்டு பாடச்
சொன்னார்கள். “பழனிவேல் இது தஞ்சம்” என்ற பாடலை சிவாஜி பாடினார். நாடகக்
கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள்.
காக்கா ராதாகிருஷ்ணன்
அப்போது, அந்தக் கம்பெனியில் காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர்,
சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர். சிவாஜியைப் பார்த்த அவருக்கு ஒரே ஆச்சரியம்.
“இங்கே எப்படியடா வந்தாய், கணேசா!” என்று கேட்டார். “நான் வீட்டுக்கு தெரியாமல் இந்த கம்பெனியில் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதே” என்று சிவாஜி கேட்டுக்கொண்டார். நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக் கல்லுக்கு சென்று முகாமிட்டது. அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி
அளிக்கும் வாத்தியாராக சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான், சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.“சின்ன பொன்னுசாமிதான் என் நாடக குரு” என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜி நடித்த முதல் நாடகம் “ராமாயணம்” அதில் அவர் போட்ட வேடம் சீதை. “யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்” என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி நடித்தார். முதல் நாளே சிறப்பாக நடித்தார், சிவாஜி. வேஷத்தை கலைத்து உள்ளே சென்றபோது, வாத்தியார் பொன்னுசாமி அவர் முதுகில் தட்டிக்கொடுத்து, “மிகவும் நன்றாக நடித்தாய்” என்று பாராட்டினார். நாட்கள் ஆக ஆக, புதுப்புது வேடங்களை ஏற்று நடித்தார், சிவாஜி. சீதை வேஷம் போட்ட அவர், பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை மயக்கும் கட்டத்தில், அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார்.
ராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்கு கிடைத்தது. இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்தபோதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார்.
பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும், அவர் ஏற்று நடித்தார்.அந்தக் காலத்தில், நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும். “சிறை” வைக்கப்பட்டது மாதிரிதான். “ஊருக்கு வா” என்று பெற்றோர் கடிதம் எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப்பிரித்து படித்துப்பார்த்துவிட்டு, கொடுக்கக்கூடியதாக இருந்தால் மட்டும்
கொடுப்பார்கள்.
அண்ணன்கள் மரணம்
ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். “என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் சவுக்கியமா?” என்று சிவாஜி விசாரித்தார். “எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு ஒரு துயரச்செய்தி கணேசா!” என்று கூறினார்,
ராதாகிருஷ்ணன். “என்ன?” என்று பதற்றத்துடன் சிவாஜி கேட்க, “உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்” என்று கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.
சிவாஜி பதறினார். உள்ளே சென்று தனியாக அழுதார். ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை. சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.
5 ஆண்டுகளுக்குப்பின் பெற்றோரை சந்தித்தார், சிவாஜி- எம்.ஆர். ராதா நாடகக்குழுவில் சேர்ந்தார் பொதுவாக, நாடகங்களில் தொடர்ந்து பெண் வேடம் போடும் சிறுவர்கள் நடப்பது, பேசுவது எல்லாம் பெண்கள் போலவே மாறிவிடுவது உண்டு.ஆனால், சிவாஜிகணேசன் பெண் வேடம் மட்டும் அல்லாமல் ஆண் வேடங்களும், மாறுபட்ட வேடங்களும் ஏற்று நடித்தார். அதனால் எதிர்காலத்தில் எந்த வேடம் கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.எம்.ஆர்.ராதா சிவாஜி நடித்து வந்த நாடகக் கம்பெனியில், எம்.ஆர்.ராதாவும் நடிகராக சேர்ந்தார். “பதிபக்தி” நாடகத்தில் சிவாஜி, சரஸ்வதி என்ற பெண் வேடத்தில் நடிப்பார். எம்.ஆர்.ராதா வில்லனாக நடிப்பார்.
“நாடகத்துறையில் ராதா அண்ணனுக்கு எல்லா வேலைகளும் தெரியும். அவர் ஒரு ஜீனியஸ்.
எலெக்ட்ரிக் வேலைகளும் செய்வார். காமெடி தெரியும். ஹீரோவாக நடிப்பார். வில்லனாக நடிப்பார். எல்லாவிதமான ரோல்களிலும் நடிப்பார்” என்று சிவாஜி கூறியுள்ளார்.
சிவாஜிகணேசன் நாடகக் குழுவினர் கோவைக்கு சென்ற போது, அங்கே உள்ள ஸ்டூடியோவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் “சந்திரஹரி” என்ற நகைச்சுவை திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் என்.எஸ்.கே.யின் மகனாக காமெடி வேடத்தில் நடிப்பதற்கு ஒரு பையன் தேவைப்பட்டான். படக்கம்பெனியைப் சேர்ந்தவர்கள், சிவாஜியையும், காக்கா ராதாகிருஷ்ணனையும் அழைத்துச் சென்றனர். இந்த இருவரில் அவர்கள் தேர்வு செய்தது, காக்கா ராதாகிருஷ்ணனைத்தான். “காக்கா ராதாகிருஷ்ணனுக்குத்தான், இயற்கையாகவே காமெடியான முகம் இருக்கிறது” என்று அவர்கள் கூறினார்கள். சிவாஜி கணேசனை, நாடகக்கம்பெனியில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள்.
பெற்றோருடன் சந்திப்பு
சிவாஜிக்கு 12 வயதான போது, நாடகக் குழுவினர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று முகாமிட்டனர். சிவாஜிக்கு பெற்றோரை பார்க்கவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது. “தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்” என்று கம்பெனி நிர்வாகிகளிடம் கெஞ்சினார். அவர்கள் மனம் இரங்கி, சிவாஜியை அனுப்பி வைத்தனர். வீட்டுக்குப்போனதும், சிவாஜி முதலில் பார்த்தது தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்தான். சிவாஜிகணேசன் குடும்பத்தைப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது, 3 அண்ணன்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து
போய்விட்டார்கள். தான் நாடகக்கம்பெனில் சேர்ந்த பிறகு பிறந்த தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும் அப்போதுதான் முதன் முதலாக சிவாஜி பார்த்தார். பாசத்தோடு தழுவிக்கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பின் சிவாஜியைப் பார்த்த தாயார் ராஜாமணி அம்மாள் கண்ணீர்விட்டு அழுதார்.பிறகு தந்தையையும், அண்ணனையும் சிவாஜி சந்தித்தார். சிறிது நேரம் அவர்களால் பேசவே முடிவில்லை. அந்த தீபாவளியை பெற்றோருடனும், அண்ணன், தம்பி, தங்கையுடனும் கொண்டாடி மகிழ்ந்தார், சிவாஜி.
ராதா வருகை
சில நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தார், சிவாஜி. ஒரு நாள் எம்.ஆர்.ராதா ஜட்கா வண்டியில் அங்கு வந்தார். “சில நாட்கள் உங்கள் வீட்டில் தங்கப்போகிறேன்” என்றார்.
“என்ன அண்ணே விசேஷம்?” என்று சிவாஜி விசாரித்தார். “நான் பொன்னுசாமிபிள்ளை கம்பெனியில் இருந்து விலகி விட்டேன். சொந்தமாக நாடகக் கம்பெனி ஆரம்பிக்கப்போகிறேன். நீயும் அதில் சேரவேண்டும்” என்றார். சிவாஜிக்கு குழப்பமாகிவிட்டது. தனக்கு ஆதரவு தந்து, நடிப்பு கற்றுக்கொடுத்த கம்பெனியை விட்டு
விலகுவதா என்று யோசித்தார். அதே சமயம் ராதாவின் பேச்சை தட்டவும் முடியவில்லை. நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின் ராதாவுடன் செல்ல முடிவு செய்தார். இதுபற்றி தன் தாயாரிடம் கூறினார். “ஏம்பா! பழைய கம்பெனியை விட்டு போகிறேன் என்கிறாயே. சரியாக இருக்குமா?” என்று தாயார் கேட்டார். “நான் ராதா அண்ணனை நம்புகிறேன். அண்ணன் ஏதாவது நல்லது செய்வார்” என்றார் சிவாஜி.எம்.ஆர்.ராதாவும், “நான் பையனை மெட்ராசுக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன். கட்டாயம் நல்ல எதிர்காலம் ஏற்படுத்திக் கொடுப்பேன்” என்று ராஜாமணி அம்மாளிடம் கூறினார்.ராதாவுடன் சென்னைக்குப் புறப்பட்டார், சிவாஜி. அவர் சென்னையைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை.
சென்னை ஜார்ஜ் டவுனில், தனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் சிவாஜியை தங்க வைத்தார், ராதா. நாடகக் கம்பெனிக்கான உடைகள், சீன்கள் போன்றவற்றை சேகரித்தார்.சிவாஜியை ஒரு நாள் ரிக்ஷாவில் ஏற்றி, ஊரைச் சுற்றிப்பார்த் துவிட்டு வருமாறு அனுப்பினார். சிவாஜி
அதிசயத்தோடு சென்னையைச் சுற்றிப்பார்த்தார்.
பெரியாருடன் அறிமுகம்
“சரஸ்வதி கான சபா” என்ற பெயரில் நாடகக் கம்பெனியைத் தொடங்க ராதா முடிவு செய்தார். நாடக சாமான்களுடன் ஈரோடு சென்றார். அங்கு “லட்சுமி காந்தன்”, “விமலா அல்லது விதவையின் கண்ணீர்” ஆகிய நாடகங்களை நடத்தலானார்.திராவிட கழகத்தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் ராதாவின் நாடகக் கம்பெனி இருந்தது. பெரியார் வீட்டுக்கு பேரறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் அடிக்கடி வருவார்கள். அவர்களுடன் சிவாஜிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.
ராதாவின் நாடகக் கம்பெனி ஈரோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றது. அப்போது, ராதாவுக்கும், அவருடைய பங்குதாரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. நாடக சாமான்களுக்கு அவர்கள்தான் முதலீடு செய்திருந்தார்கள். எனவே, நாடகக் கம்பெனியை பங்குதாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு ராதா சென்னைக்கு சென்றுவிட்டார். நாடகக் கம்பெனியில் தொடர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிவாஜி இருந்தார்.நாடகக் கம்பெனி, கேரளாவுக்குச் சென்று
பாலக்காட்டில் முகாமிட்டது. சிறு வேடங்களில் நடித்து வந்த சிவாஜி, “மனோகரா” நாடகத்தில் கதாநாயகனாக -மனோகரனாக நடித்தார். இந்த நாடகத்தை கொல்லங்கோடு மகாராஜா ஒரு நாள் பார்த்தார். சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி, வெள்ளித்தட்டு ஒன்றை பரிசளித்தார்.
பஸ் கம்பெனியில் “மெக்கானிக்” வேலை பார்த்தார், சிவாஜி! சிவாஜிகணேசன் சிலகாலம் பஸ் கம்பெனியில் “மெக்கானிக்” ஆக வேலைபார்த்தார் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால், அது உண்மை. மாதம் 7 ரூபாய் சம்பளத்தில், அவர் “மெக்கானிக்” வேலை பார்த்திருக்கிறார்.
சிவாஜிகணேசன் நடித்துக்கொண்டிருந்த “சரஸ்வதிகான சபா” கொல்லங்கோட்டில் முகாமிட்டிருந்தபோது, குறுகிய காலம் அவர் நாடக உலகைவிட்டு விலகி இருக்க நேர்ந்தது.
நாடகக் கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்த தங்கவேலு என்ற நடிகர் சிவாஜியின் நெருங்கிய நண்பர். இவரும் திருச்சியை சேர்ந்தவர். அவரைப் பார்க்க அவர் தாயார் வந்திருந்தார். நாடகக் கம்பெனியில் மகன் கஷ்டப்படுவதைப் பார்க்க சகிக்காத அந்த அம்மாள், மகனை வீட்டுக்குக் அழைத்துக்கொண்டு போய்விடத் தீர்மானித்தார்.
“கணேசா! நீயும் என்னுடன் வந்துவிடு” என்று தங்கவேலு அழைத்தார். சிவாஜிக்கும் ஒரு மாறுதல் தேவைப்பட்டது. எனவே, நண்பனுடன் கிளம்பத் தயாரானார். தங்கவேலுவின் உறவினர்கள் பொள்ளாச்சியில் இருந்தார்கள். அங்கு சென்று, அவர்களிடம் உதவி பெற்றுக்கொண்டு, திருச்சிக்குப் போக முடிவு செய்தார்கள்.
காட்டுப்பாதை
கொல்லங்கோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு நடந்தே சென்றார்கள். காட்டுப்பாதையில் 40 மைல் நடக்க வேண்டும். வழியில் பலத்த மழை பிடித்துக்கொண்டது. மழையில் நனைந்து கொண்டே சென்றார்கள். வழியில், “ஐயோ” என்று தங்கவேலு அலறினார். சிவாஜி திரும்பிப்பார்த்தார். தங்கவேலுவின் கால் அருகே ஒரு பாம்பு நெளிந்து போய்க்கொண்டு இருந்தது. தங்கவேலுவை பாம்பு கடித்துவிட்டது என்பதை சிவாஜி உணர்ந்து கொண்டார். அலறிக்கொண்டிருந்த தங்கவேலுவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். தங்கவேலுவின் தாயாரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். அங்குள்ளவர்கள், வைத்தியரை அழைத்து, தங்கவேலுவுக்கு தகுந்த சிகிச்சை அளித்தார்கள். தங்கவேலு பிழைத்துக்கொண்டார். பிறகு கிராமவாசிகளின் உதவியுடன் சிவாஜியும், தங்கவேலுவும், அவர் தாயாரும் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து திருச்சிக்கு போய்ச்சேர்ந்தார்கள்.
மெக்கானிக்
வீட்டில் ஒரு மாதகாலம் சும்மா இருந்தார், சிவாஜிகணேசன். குடும்பத்தை நடத்துவதற்கு பெற்றோர் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தார். ஏதாவது வேலைக்குப் போனால், அம்மாவுக்கு உதவியாக இருக்குமே என்று நினைத்தார்.அப்போது, “திருச்சி ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்” (டி.எஸ்.டி.) என்ற பஸ் கம்பெனி இருந்தது. நண்பர் ஒருவரின் முயற்சியால், அந்த பஸ் கம்பெனியில் சிவாஜிக்கு மெக்கானிக் வேலை கிடைத்தது.
ஏற்கனவே, சிவாஜிக்கு மெக்கானிக் வேலை கொஞ்சம் தெரியும். ஒரு மாதம் பயிற்சி பெற்று, வேலையை நன்றாக கற்றுக்கொண்டார். அவருக்கு அப்போது சம்பளம் 7 ரூபாய்! அதை அம்மாவிடம் கொடுத்து விடுவார். மெக்கானிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும்,
மனம் நாடகத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
“நாம் ஒரு நடிகன். இப்படி இரும்பைத் தூக்கிக்கொண்டு அலைகிறோமே. ஏதாவது விடிவுகாலம் வருமா? அல்லது காலம் எல்லாம் இப்படியே போய்விடுமா?” என்று நினைப்பார்.
மீண்டும் நாடகம்
அப்போது யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளையின் “பாலகான சபா”, “மங்கள கான சபா” என்ற புதிய பெயரில் நாடகங்கள் நடத்தி வந்தது. அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய டி.கே.சம்பங்கி, எம்.இ.மாதவன் ஆகிய நடிகர்கள் இந்த நாடகக் கம்பெனியை வாங்கி, கும்பகோணத்தில் முகாமிட்டு நாடகம் நடத்திக்கொண்டு இருந்தனர்.சிவாஜியின் பழைய நண்பர் ஒருவர், அந்த நாடகக் குழுவில் இருந்தார். திருச்சிக்கு வந்த அவர் சிவாஜியை சந்தித்தார். “நீ மெக்கானிக் வேலையா பார்க்கிறாய்? நாடக நடிகனான நீ, இப்படி இரும்பைத் தூக்கிக்கொண்டு அலைகிறாயே. என்னுடன் வந்து விடு. மீண்டும் நாடகத்தில் நடிக்கலாம். நல்ல நடிகர்கள் இருந்தால் அழைத்து வருமாறு, கம்பெனி முதலாளி என்னிடம் சொன்னார்” என்றார். இதுபற்றி தாயாரிடம் சிவாஜி ஆலோசித்தார். மகனை மீண்டும் நாடகத்துக்கு அனுப்ப ராஜாமணி அம்மாளுக்கு விருப்பம் இல்லை. “இப்போது பார்க்கும் மெக்கானிக் வேலையிலேயே தொடர்ந்து இரு. எதிர்காலத்தில் பெரிய மெக்கானிக் ஆகலாம்.
நாடகக் கம்பெனி வேண்டாம்” என்று கூறினார்.சிவாஜி யோசித்தார். நடிப்பு என்பது அவருடைய ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று. மீண்டும் நாடகக் கம்பெனிக்கு போகக் தீர்மானித்தார். “அம்மா! நாடகத்தில் தொடர்ந்து நடித்தால், எதிர் காலத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கொஞ்சகாலம் பொறுத்துக்கொள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, நண்பனுடன் கும்பகோணம் புறப்பட்டார்.அங்கு, சிவாஜியின் பழைய நண்பர்கள்தான் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் சிவாஜியை வரவேற்றார்கள்.
என்.எஸ்.கிருஷ்ணன்
மங்கள கான சபா, சென்னைக்கு சென்று நாடகங்கள் நடத்தி வந்தது. அப்போது, அந்த கம்பெனியை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாங்கி, “என்.எஸ்.கே.நாடக சபா” என்ற புதிய பெயரில் நாடகங்களை நடத்தலானார்.அப்போது அந்த கம்பெனியில் கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி ஆகியோர் சேர்ந்தார்கள். கே.ஆர்.ராமசாமி நன்றாக பாடக்கூடியவர். எனவே, “மனோகரா”, “ரத்னாவளி” போன்ற நாடகங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். சிவாஜி மீண்டும் பெண் வேடம் போட்டார்!
இந்த சமயத்தில் (1944-ம் ஆண்டு நவம்பரில்) “இந்துநேசன்” என்ற மஞ்சள் பத்திரிகையின்
ஆசிரியரான லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு சதி செய்தாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.கே.தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரும் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்து, விடுதலை பெறுவதற்காக சட்டத்தின் துணையுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தாலும், தன்னுடைய நாடகக் குழுவினர் வேலை இல்லாமல் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணினார். எனவே, நாடகக் கம்பெனியைத் தொடர்ந்து நடத்தும்படி, தன்
மனைவி டி.ஏ.மதுரத்திடம் கூறினார்.
நாடகக் கம்பெனியில் பிளவு
எஸ்.கே.நாடகக் குழுவில், அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமமும், கே.ஆர்.ராமசாமியும் முக்கிய
நடிகர்கள். இவர்களில் யாரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைப்பது என்று மதுரம் யோசித்தார். முடிவில் சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார். இதனால், கே.ஆர்.ராமசாமி வருத்தம் அடைந்தார். என்.எஸ்.கே.நாடக சபாவில் இருந்து விலகி, புது
நாடகக் கம்பெனி தொடங்க தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து, நாடகக் குழு இரண்டாக
பிளவுபட்டது. சிலர் சகஸ்ர நாமம் அணியிலும், சிலர் கே.ஆர்.ராமசாமி அணியிலும் சேர்ந்தனர். கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்தவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவர். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் கே.ஆர்.ராமசாமி. அவர் அண்ணாவை
சந்திப்பதற்காக காஞ்சீபுரம் சென்றார். போகும்போது, சிவாஜிகணேசனையும், தன் ஆதரவாளர்களையும் அழைத்துச்சென்றார். அண்ணா அப்போது “திராவிட நாடு” என்ற
பத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகத்தில், சிவாஜியும், மற்றவர்களும்
தங்கினார்கள். சிவாஜிகணேசன் வாழ்க்கையில் திருப்புமுனை திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு
இருந்தனர்.
தொடரும் …

No comments:

Post a Comment